செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

Published On 2016-08-15 13:02 IST   |   Update On 2016-08-15 13:02:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் மைதானத்தில் தேசிய கொடியை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றி வைத்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் மைதானத்தில் தேசிய கொடியை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றி வைத்தார்.

பின்னர் நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார்.

விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் ரூ. 7 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 567 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, வருவாய் அலுவலர் சவுரிராஜன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் ஆர்.டி. சேகர் தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஆணையர் முஜிபுர் ரகுமான், கவுன்சிலர்கள் மனோகரன், ராம மூர்த்தி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, புதுவாழ்வு திட்டம், வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் மூலம் மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 163 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி டி. இளங்கோவன், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் (பொறுப்பு) ராதா கிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதில் ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News