செய்திகள்

குடிபோதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்கம்பியை தொட்ட வாலிபர் தூக்கி வீசப்பட்டார்

Published On 2016-08-05 09:37 IST   |   Update On 2016-08-05 09:37:00 IST
பல்லாவரம் அருகே குடிபோதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்கம்பியை தொட்ட வாலிபர் தூக்கிவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த நாகல்கேணி திருநீர்மலை ரோட்டைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 30). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு குடிபோதையில் அவரது குழந்தையை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்தார்.

அதன்பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அடிக்கடி குடிபோதையில் அப்பகுதியில் சுற்றி வந்தார்.

நேற்று மாலை நாகல்கேணி அண்ணாசாலை சற்குணம் சாலை சந்திப்பில் குடிபோதையில் சுற்றித்திரிந்த சங்கர் திடீரென அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார்.

இதை பார்த்த பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதற்குள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்கம்பியை அவர் தொட்டார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மின்வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி சங்கரை டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே இறக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News