செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு

Published On 2016-07-14 12:13 IST   |   Update On 2016-07-14 12:13:00 IST
மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ நோக்குடன் மத்திய சுற்றுலாத்துறை துவக்கிய ‘சுவதேஷ் தர்‌ஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் வரலாற்று சுற்றுலா தளமாக கருதப்பட்டாலும் அங்கு கடற்கரை தூய்மை இல்லாமலும், மின் விளக்குகள் இல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இன்றி இருந்தது.

இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்று வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு இணையதளம் வழியாக புகார்களும் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ நோக்குடன் மத்திய சுற்றுலாத்துறை துவக்கிய ‘சுவதேஷ் தர்‌ஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கோவில் வடபகுதி மற்றும் தென்பகுதி கடலோரம் 3.2 கி.மீ. தூரத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன குப்பை தொட்டி, நம்ம டாய்லைட், 100 எல்.இ.டி மின் விளக்கு, கான்கிரீட் நடைபாதை, கண்காணிப்பு கேமரா, வரலாற்று விபரத்துடன் கூடிய வழிகாட்டி பலகை, முதலுதவி மையம், வைபை வசதி, கண்காணிப்பு கோபுரம் வைக்கப்படுகிறது.

மேலும் பசுமை பூங்கா, கடற்கரையை தூய்மைபடுத்த நவீன வாகனம், கடலில் சிக்குவோரை மீட்க ரப்பர் படகு, சுற்றுலா பயணிகளின் வாகணம் நிறுத்த கூடுதல் இடம் போன்ற பல வசதிகளுடன் சென்னை மெரினா கடற்கரை போல் மாமல்லபுரம் கடற்கரையையும் மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

முதல் கட்ட பணியாக மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குனர் சோஹெப் சாமந்த் உள்பட 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழக சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் வேணுகோபால், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், தலைவர் (பொறுப்பு) தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News