செய்திகள்

பொன்னமராவதி அருகே கோவில் காளைக்கு அஞ்சலி: பொதுமக்கள் சோகத்தில் மூழ்கினர்

Published On 2016-06-27 19:11 IST   |   Update On 2016-06-27 19:11:00 IST
பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி மூங்கில்குறிச்சி நல்லூர் கோயில் காளை பாயும்புலி நேற்று மறைந்தது. ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மேளதாளங்கள் முழங்கி இறுதிச்சடங்கு செய்தனர்.

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சி மூங்கில் குறிச்சி நல்லூர் நீலகண்டிஅம்மன் கோயில் காளை ஒன்று கடந்த 18வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்தது. இது நேற்று திடீர் என உடல்நலக்குறைவால் இறந்துள்ளது. இதற்கு 18வயது ஆகின்றது.

இதுவரை 500ஜல்லிக் கட்டில் பங்கு பெற்றுள்ளது 15 மாவட்டங்களுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு சிறப்பு மிக்க காளை நேற்று முன்தினம் 24 ம் தேதி இரவு இறந்துள்ளது.

இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மனிதர்களுக்கு போல மாலை அலங்காரம் செய்து, பணம் மாலை கட்டி தொங்க விட்டு கோயில் முன்பு வைத்து வழிபட்டனர். பொதுமக்கள் விரதம் இருந்து ஒன்று கூடி மைக்செட் மற்றும் மேளதாளம் வைத்தும், பெண்கள் ஒப்பாறி பாடல்கள் பாடியும் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேளதாளங்களுடன் அந்தக்காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீலகண்டி அம்மன் கோயில் முன்பு நல்லடக்கம் செய்தனர். கோயில் காளை இறந்ததால் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.

Similar News