செய்திகள்

கடலூர் அருகே நடுக்கடலில் அலையில் சிக்கிய படகு மாயம் - 4 மீனவர்கள் கதி என்ன?

Published On 2016-06-14 15:09 IST   |   Update On 2016-06-14 15:09:00 IST
கடலூர் அருகே நடுக்கடலில் அலையில் சிக்கி படகு மாயமானது. அதிலிருந்த 4 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடலூர்:

கடலூர் சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் 20 பேர் நேற்று மாலை மீன்பிடிக்க சென்றனர். அந்த விசைப் படகுடன் பைபர் படகும் சென்றது.

இதில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த முத்துகுமரன்(33), கடலூர் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி(35), முதுநகரைச் சேர்ந்த ராஜசேகர்(27), ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் உள்பட 4 பேர் சென்றனர்.

விசைப்படகுடன் பைபர் படகு கயிறால் கட்டி இணைக்கப்பட்டிருந்தது. நடுக்கடலில் அவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்திருந்தனர். அப்போது சுழல் காற்று வீசியது. விசைப்படகில் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது.

விசைப்படகில் இருந்தவர்கள் அந்த பைபர் படகை மீட்க முயன்றனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் பைபர் படகு இழுத்து செல்லப்பட்டது. அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அபய குரல் எழுப்பினர்.

புதுவை கடல்பகுதி வரை பைபர் படகை அலை இழுத்து சென்றது. விசைப்படகு மீனவர்கள் அதை மீட்க பின் தொடர்ந்து சென்றனர்.

இந்த நிலையில் பைபர் படகு திடீரென்று மாயமானது. இதனால் விசைப்படகு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுவை மற்றும் கடலூர் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து படகுகள் மூலம் தேடினர்.

அப்போதும் பைபர் படகை கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் இருந்த 4 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து சென்னையில் உள்ள கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மீனவர்கள் மாயமானதால் கடலூரில் மீனவர்கள் கவலையுடன் காணப்பட்டனர். அவர்களும் படகுகளில் சென்று கடலில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News