செய்திகள்

காவலாளியை கட்டிப்போட்டு 7 கார்கள் திருட்டு: மேலும் ஒரு சொகுசு கார் மதுரவாயலில் மீட்பு

Published On 2016-06-09 11:30 IST   |   Update On 2016-06-09 11:30:00 IST
காவலாளியை கட்டிப்போட்டு கார்கள் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சொகுசு கார் மதுரவாயலில் மீட்கப்பட்டுள்ளது. கார் கடத்தல் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலந்தூர்:

நந்தம்பாக்கத்தை அடுத்த மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி-அம்பேத்கார் நகர் லிங்க் சாலையில் ஹூண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது.

நேற்று இரவு 60-க்கும் மேற்பட்ட கார்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. காவலாளியாக வேளச்சேரியை சேர்ந்த மனோகரன் இருந்தார்.

நேற்று அதிகாலை 10 பேர் கும்பல் திடீரென குடோனுக்குள் புகுந்து கற்களை வீசினர். அவர்கள் காவலாளி மனோகரனை சரமாரியாக தாக்கி கட்டி போட்டனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் உத்தரவுப்படி கார் திருட்டு கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கடத்தப்பட்ட 7 கார்களில் 5 கார்கள் வளசரவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

மேலும் அந்த கார்களில் போலி நம்பர் பிளேட்டுகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை செய்த போது வளசரவாக்கத்தில் உள்ள கடையில் போலி நம்பர் பிளேட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் கார் கடத்தல்காரர்கள் உருவம் பதிவாகி இருந்தது. இதே போல் வளசரவாக்கத்தில் கார்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவிலும் அதே வாலிபர்கள் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட மற்றொரு கார் மதுரவாயல், அஷ்டலஷ்மி நகர் 16-வது தெருவில் அனாதையாக நிறுத்தப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த காரை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை மீட்டனர். காரை நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கடத்தப்பட்ட மேலும் ஒரு கார் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது. அதனையும் மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே கார் கடத்தல் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதில் முக்கிய குற்றவாளிகளாக ராமாபுரம் செந்தில், வளசரவாக்கம் ரமேஷ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.

தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கிய பின்னர் தான் கார் திருட்டில் உள்ள பின்னணி தகவல்கள் தெரிய வரும்.

Similar News