செய்திகள்

இன்ஸ்பெக்டர் திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Published On 2016-05-29 16:09 IST   |   Update On 2016-05-29 16:09:00 IST
இன்ஸ்பெக்டர் திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ராமதுரை (40). சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 26-ந்தேதி ‘பீட்’ பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு வந்த ராமதுரை பைக்கை நிறுத்திவிட்டு சாவியை மறந்து எடுத்து சென்றுவிட்டார்.

இதனால் அவருக்கு பின்னால் பணியை தொடர வந்தவர் பைக்கை எடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் போலீஸ்காரர் ராமதுரையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது தொடர்பான புகார் சேலையூர் உதவி கமிஷனருக்கு தெரியாமல் பரங்கிமலை துணை கமிஷனருக்கு சென்றது. இதுபற்றி உதவி கமிஷனர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர், பைக் சாவியை எடுத்து சென்ற போலீஸ்காரர் ராமதுரையை சரமாரியாக திட்டினார்.

இதில் மனவேதனை அடைந்த ராமதுரை அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் மயக்க நிலையிலேயே மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வந்து விஷம் குடித்ததை கூறி மயங்கினார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராமதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும் போது சட்டசபை தேர்தலையட்டி சென்னை புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு வட சென்னை பகுதியில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

அவர்கள் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்து பணிக்கு வரும் அதிகாரிகள் அந்த வெறுப்பை அவர்களின் கீழ் பணி செய்யும் போலீஸ் காரர்கள் மீது காட்டுகின்றனர் என்றார்.

Similar News