செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே மாதத்தில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் 2 குட்டிகள் ஈன்றன

Published On 2016-04-28 08:36 IST   |   Update On 2016-04-28 08:36:00 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே மாதத்தில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் 2 குட்டிகளை ஈன்றுள்ளன.
வண்டலூர்:

சிங்கத்தின் வாலின் நுனியில் கொத்தாக முடியிருப்பது போல் உள்ள குரங்கு, சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது. இக்குரங்கு பெரும்பாலும் சோலைக்காடுகளில் காணப்படுவதால் சோலை மந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சிங்கத்தின் பிடரியை ஒத்த முகம், வால், கருமை நிற உடல், வெளிரிய பிடரி ஆகியவற்றால் பெரும்பான்மை பார்வையாளர்களை கவரும் இந்த உயிரினம் அரிதான மற்றும் அழிந்து வரும் ஓரிட உயிரினம் ஆகும்.

உலகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மட்டும் இக்குரங்கு காணப்படுகிறது. இக்குரங்குகளின் வாழ்விடங்களான பசுமை மாறாக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்கள் வளர்க்கப்படுவதால் இக்குரங்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது.

எனவே இந்த உயிரினத்தை அழிவில் இருந்து காக்க அடைப்பிட இனப்பெருக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இனப்பெருக்க ஒருங்கிணைப்பு பூங்காவாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டது. மேலும், மைசூரு, திருவனந்தபுரம் பூங்காக்கள் ‘‘இனப்பெருக்க பங்கேற்பு பூங்காவாக’’ செயல்படுகின்றன.

இத்திட்டப்படி பார்வையாளர் வருகை புரியாத இடத்தில், இயற்கையான காட்டுப்பகுதியில் 2 அடைப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண், இரண்டு பெண் கொண்ட 2 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அடைப்பிடங்களில் விடப்பட்டன. திறந்தவெளி அடைப்பிடத்தில் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களுடன் ஆல், அரசு, மா, பலா, வேம்பு, நெல்லி, இலுப்பை, கொடுக்காப்புளி போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

விலங்கு இல்லத்தில் குரங்குகள் நடமாடுவதற்கு தகுந்தவாறு மரக்கிளைகள், கயிறுகள், பலகைகள் ஆகியவற்றை கொண்டு சுற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டன. இதனால் இயற்கையான சூழ்நிலையை ஒத்த வாழ்விடம் அமையப்பெற்றதால் சிங்கவால் குரங்குகள் விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது.

இத்திட்டத்தின் கீழ் முதன் முதலாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வால்பாறை சோலைக்காடுகளிலிருந்து 1990-ம் ஆண்டு ஒரு சிங்கவால் ஆண் குரங்கும், 3 சிங்கவால் பெண் குரங்குகளும், 1999-ம் ஆண்டு ஒரு சிங்கவால் பெண் குரங்கும் கொண்டு வரப்பட்டது. இந்த குரங்குகளும், அதன் வழித்தோன்றல்களும் இனப்பெருக்கம் செய்து இதுவரை 50 குட்டிகளை ஈன்றுள்ளன. இங்கு பிறந்த சிங்கவால் குரங்குகள் விலங்குகள் பரிமாற்ற முறையில் கவுகாத்தி, சிம்லா, டெல்லி, திருவனந்தபுரம், மைசூரு, ஐதராபாத், பரோடா, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மறைவிட இனப்பெருக்க மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அஞ்சலி என்ற 7 வயது பெண் சிங்கவால் குரங்கும், அசோக் என்ற 9 வயது ஆண் சிங்கவால் குரங்கும் இணை சேர்ந்து கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு குட்டி ஈன்றது. இதே போல பார்வையாளர்கள் பார்வையிடும் இருப்பிடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ராகவி என்ற 7 வயது பெண் சிங்கவால் குரங்கும், ரவி என்ற 9 வயது ஆண் சிங்கவால் குரங்கும் இணை சேர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி ஒரு குட்டியை ஈன்றது.

ஒரே மாதத்தில் பிறந்த இந்த 2 குட்டிகளும் வளர்ந்த பிறகே ஆணா?, பெண்ணா? என தெரியவரும். இவைகளையும் சேர்த்து வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது.

இத்தகவலை பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News