செய்திகள்

புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து கார் உருண்டது: 4 பேர் பலி

Published On 2016-04-12 08:58 IST   |   Update On 2016-04-12 08:58:00 IST
புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து கார் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
புதுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(வயது 32). இவர் தனது நண்பர்கள் ராஜா(36), வெற்றிச்செல்வன்(46), நாகராஜன்(55), ராஜேந்திரன்(38) ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் சென்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் நேற்று மதியம் அதே காரில் புறப்பட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை வெற்றிச்செல்வன் ஓட்டினார். நார்த்தாமலையை அடுத்த நக்கீரர்வயல் அருகே சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று சாலையில் விழுந்து 3 முறை உருண்ட பின்னர் நேராக நின்றது. இதில் காரில் இருந்த 5 பேரும் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த ராஜா, வெற்றிச்செல்வன், நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த அமிர்தராஜ், ராஜேந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அமிர்தராஜ் பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Similar News