பெண்களிடம் தாலி சங்கிலி பறிக்கும் 2 வாலிபர்கள் சிக்கினர்: 2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மீட்பு
- அம்மா குளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சேலத்தில் ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அரியலூர்:
அரியலூர் ராஜாஜி நகர் பி.கே. காலனியை சேர்ந்தவர் பொன்ராணி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஓ.கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சகாய அன்பரசு தலைமையில் அம்மா குளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22), பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த அஜீத் (19) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பொன்ராணியின் தாலி சங்கிலியை பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், சேலத்தில் ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வெங்கடேஷ், அஜீத்தை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர். குறுகிய காலத்தில் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோ ஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினார்.