தமிழ்நாடு செய்திகள்

ஆவடி, செங்குன்றம் பகுதியில் 119 ரவுடிகள் அதிரடி கைது

Published On 2022-10-11 12:45 IST   |   Update On 2022-10-11 12:45:00 IST
  • கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.
  • மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்:

தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதேபோல் ஆவடி காவல் ஆணையத்துக்கு உட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.

இவர்களில் 87 ரவுடிகள் மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவுப்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதிமொழியை மீறினால், உடனடியாக கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News