மழை நீர் வடிகால் பணிகளுக்காக சென்னையில் 100 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன
- 1 மரம் வெட்டப்படும்போது 10 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
- சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை பாதுகாக்கும் விதமாக அதன் பக்கவாட்டு கிளைகளை மட்டும் வெட்டி வருகிறோம்.
சென்னை:
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது கனமழை பெய்யும் என்பதால் அடுத்த மாதத்திற்குள் (செப்டம்பர்) மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக 15 மண்டலங்களிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதோ அந்த பகுதிகளில் பெரிய அளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பல இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. கே.கே.நகர், அடையார், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர். ஆகிய பகுதிகளில் இந்த வாரம் மட்டும் 10 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "1 மரம் வெட்டப்படும்போது 10 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை பாதுகாக்கும் விதமாக அதன் பக்கவாட்டு கிளைகளை மட்டும் வெட்டி வருகிறோம். மின் கம்பங்களில் உரசும் மரக்கிளைகளையும் அகற்றி மரங்களை பாதுகாத்து வருகிறோம். அந்த வகையில் மொத்தம் 1,500 மரங்களை 'ட்ரிம்' செய்துள்ளோம்" என்று கூறினார்.