தமிழ்நாடு

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தவர்கள்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 10 பேர் அகதிகளாக வருகை

Published On 2022-11-06 03:15 GMT   |   Update On 2022-11-06 03:15 GMT

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு படகில் குழந்தைகள் உள்பட சிலர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் வந்து இறங்கினர். பின்னர் அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்து ராமேசுவரம் கடலோர போலீசார் விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 அகதிகளையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 3 குடும்பங்களை சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் எனவும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், எனவே தமிழகத்தில் குழந்தைகளுடன் வாழ்வதற்காக இங்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறியபோது, இலங்கையில் தற்போதும் ஒரு கிலோ சீனி ரூ.200, அரிசி ரூ.450, பால் பவுடர் ரூ.200, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1,200, ஒரு லிட்டர் மண்எண்ணெய் மற்றும் டீசல் ரூ.500, காய்கறிகள் ஒரு கிலோ ரூ.400 என விலைவாசி உள்ளதாக தெரிவித்தனர். விசாரணைக்கு, பின்னர் 10 அகதிகளும் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

    Tags:    

    Similar News