பீலேவின் உடலுக்கு 24 மணி நேரம் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்- லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
- நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார்.
சாண்டோஸ்:
பிரேசில் கால்பந்தின் ஜாம்பவான் பீலே புற்று நோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது.
பீலேயின் உடல் பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பீலேயின் உடல் அப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள நெக்ரோ போல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
பீலேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார். 12 கோல்கள் உலக கோப்பையில் அடித்துள்ளார்.