null
ஐசிசி கோப்பையை இனி திருடித்தான் கொண்டு வர வேண்டுமா? கம்ரான் அக்மல் ஆதங்கம்
- வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்தது.
- நெதர்லாந்து அணி கூட நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுவிடலாம் என நினைக்கும்.
பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் 2 போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.
இதனையடுத்து தொடரை கைப்பற்றும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடவுளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். நாம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டோம் என்பதை பாருங்கள். ஜிம்பாப்வே போன்ற அணிகள் கூட நம்மை எளிதாகத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறது. நெதர்லாந்து அணி கூட பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஆடினால், நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடலாம் என நினைக்கும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கி விட்டீர்கள்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தீர்கள்? வங்கதேச அணி 350 ரன்கள் குவித்திருக்கும். லிட்டன் தாஸ் மெதுவாக ஆடியதால் தான் 290 ரன்களுக்குள் சுருண்டனர். இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள்.
பாகிஸ்தான் அணியின் போட்டிகளை இனி ஒரு சீரியஸான ஆட்டமாகப் பார்க்க முடியாது. இது ஒரு 'காமெடி சீரிஸ்' போல ஆகிவிட்டது.
என கம்ரான் அக்மல் கூறினார்.