என் விதியை யாராலும் மாற்ற முடியாது- டி20 தேர்வு குறித்து கில் கருத்து
- டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை.
- தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
மும்பை:
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை.
அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும், இஷான் கிஷன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது என டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுப்மன் கில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
எப்போது கடந்த விஷயங்களை பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கும் பழக்கம் இல்லை. வாழ்க்கையின் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைப்பேன். இந்திய அணிக்காக விளையாடும் போது, ஒவ்வொரு வடிவமும் சவால் நிறைந்தது தான். ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2011ல் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் வெல்ல முடியவில்லை. ஒருநாள் வடிவம் எளிதானது என்று சொல்லிவிடலாம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவமும் எளிதாக இருக்காது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம். மனதளவில் தயாராக வேண்டியதும் முக்கியம்.
என்று கில் கூறினார்.