TNPL எலிமினேட்டர் சுற்று: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
- திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
- அஸ்வின் அரைசதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் அரைசதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
16.4 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. எனவே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.