இசக்கிமுத்து, மதிவாணன் அபாரம்.. சேப்பாக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய திருப்பூர்
- தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
- 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஆஷிக்- மோகித் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆஷிக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பாபா அப்ராஜித் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
அவர் 13 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மோகித் 25 ரன்னிலும் விஜய் சங்கர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் சேப்பாக் அணி 16.1 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது.
திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து, மதிவாணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.