3 நாடுகள் கால்பந்து: இந்தியா-வியட்நாம் அணிகள் இன்று மோதல்
- மிகவும் வலுவான அணிக்கு எதிரான இந்த ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் கூறினார்.
- இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்த முடியும்.
ஹோ சி மின் சிட்டி:
வியட்நாம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூருடன் டிரா கண்டது. வியட்நாம் அணி தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை துவம்சம் செய்தது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தரவரிசையில் 94-வது இடத்தில் உள்ள வியட்நாமை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்த முடியும். வியட்நாம் அணி தனது முதலாவது ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அளித்த பேட்டியில், 'மிகவும் வலுவான அணிக்கு எதிரான இந்த ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதற்கு தகுந்தபடி நமது அணியின் அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் பந்தை கடத்தி செல்லும் விதத்தை கணித்து செயல்படுவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை யூரோ ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.