விளையாட்டு
ஷிகர் தவான்

ஷிகர் தவான் அதிரடி... சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

Published On 2022-04-25 21:22 IST   |   Update On 2022-04-25 21:22:00 IST
அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஷிகர் தவான்- பனுகா ராஜபக்சே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். 

தொடர்ந்து அவர் சதத்தை நோக்கி முன்னேற, மறுமுனையில் பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 19 ரன்கள், பேர்ஸ்டோ 6 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

Similar News