விளையாட்டு
குசால் மெண்டிஸ்

ஆஸி.க்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று ஒயிட்வாஷை தவிர்த்தது இலங்கை

Published On 2022-02-20 16:39 IST   |   Update On 2022-02-20 16:39:00 IST
இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 58 பந்தில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. இன்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்துவிட வேண்டும் என எண்ணத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அதேவேளையில் எப்படியாவது ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என உத்வேகத்துடன் இலங்கை அணி களம் இறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் (8), மெக்டெர்மோட் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வடே 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் நிசாங்கா 13 ரன்னிலும் வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷை தவிர்த்தது.

Similar News