விளையாட்டு
ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 343 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும், ஹசீப் ஹமீது 25 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தனது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக விளையாடியது .
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.டேவிட் வார்னர் 94 ரன்களுடனும் மார்னஸ் லேபஸ்சேகன் 74 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 112 ரன்களும். மிட்சேல் ஸ்டார்க் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 3 விக்கெட்டும் ,கிறிஸ் வோக்ஸ் , ஜோ ரூட் ,மார்க் வுட் ,ஜேக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.