விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பியான்கா விலகல்
கொரோனா பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டதாக கனடா வீராங்கனை பியான்கா கூறியுள்ளார்.
டோராண்டோ:
ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 46-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகி இருக்கிறார்.
‘கொரோனா பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். இதனால் என்னால் போதிய அளவு பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அடுத்த சீசனுக்கு தயாராக எனக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த விலகல் முடிவை எடுத்து இருக்கிறேன்’ என்று பியான்கா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.