செய்திகள்
ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன்-டெல்லி கேப்டன் ரிஷாப்பண்ட்

சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி?- டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்

Published On 2021-09-22 05:30 GMT   |   Update On 2021-09-22 05:30 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

டெல்லி அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. தோள்பட்டை காயத்தால் போட்டிக்கு முன்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்று கலக்கலாக செயல்பட்டார். இப்போது 4 மாதங்கள் கழித்து ஐ.பி.எல். மீண்டும் தொடங்கி இருப்பதால் அதற்குள் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஆனாலும் கேப்டன்ஷிப்பில் மாற்றமின்றி ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு வீரராக நீடிப்பார் என்று ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது.

ஷிகர் தவானும் (8 ஆட்டத்தில் 380 ரன்), பிரித்வி ஷாவும் (308 ரன்) முதல் சீசனில் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தற்போதைய 2-வது கட்ட போட்டிகளிலும் அவர்கள் அதே போன்று விளையாடினால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிவிட முடியும். மற்றபடி ஸ்டீவன் சுமித், ரஹானே, ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ், பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அஸ்வின், நோர்டியா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா என்று மிரட்டல் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் ஸ்டீவன் சுமித், ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

ஐதராபாத் சன்சரைசர்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தோற்று கடைசி இடத்தில் தவிக்கிறது. 21 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் ஐதராபாத் அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இனி எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் பாதியில் 6 ஆட்டங்களுக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் ஒதுங்க, கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் புதிய சீசனில் ஐதராபாத் அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக பொருத்தமான தொடக்க ஆட்டக்காரரை அடையாளம் காண வேண்டி உள்ளது. அனேகமாக வார்னருடன், விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. பேட்டிங்கில் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், புவனேஷ்வர்குமார், காயத்தில் இருந்து மீண்டுள்ள டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, ஜாசன் ஹோல்டர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னையில் சந்தித்த லீக் ஆட்டம் சமனில் (டை) முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி கண்டது நினைவிருக்கலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Tags:    

Similar News