செய்திகள்
ரமிஸ் ராஜா

பின்வாங்கிய நியூசி., இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள்... கோபத்தின் உச்சத்தில் ரமிஸ் ராஜா... 'பழிவாங்க' சபதம் எடுத்தார்

Published On 2021-09-21 11:04 GMT   |   Update On 2021-09-21 11:04 GMT
நியூசிலாந்து, தொடரிலிருந்து விலகுவதாக சொன்னபோதே, எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
பாகிஸ்தான்:

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.

இந்நிலையில் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது பற்றி வாரியத்தின் தலைவர் ரமிஸ் ராஜா கூறுகையில்,

நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்தும் தொடரிலிருந்து விலகியுள்ளது வருந்தத்தக்கது. ஆனால், இதை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். நியூசிலாந்து, தொடரிலிருந்து விலகுவதாக சொன்னபோதே, எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

இப்போது இங்கிலாந்து, நியூசிலாந்து போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தானுக்கு வர தயக்கம் காட்டி வருகிறது. அவர்கள் மூவரும் ஒரே மேற்கத்திய கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். எங்களை அவர்கள் இன்னும்  தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.  

டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு அணியை (இந்தியா) மட்டும்தான் நாங்கள் டார்கெட்டாக வைத்திருந்தோம். ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இரு அணிகள் சேர்ந்துள்ளன. அவை நியூசிலாந்தும் இங்கிலாந்தும் தான். அவர்களை நாங்கள் மைதானத்தில் பழி தீர்ப்போம்.

இவ்வாறு அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
Tags:    

Similar News