செய்திகள்
வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய மந்திரி நேரில் வாழ்த்து
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளது.
புதுடெல்லி:
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவரை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாரியப்பனுக்கு இமாசல பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பி அணிவித்து மகிழ்ந்தார். மேலும், சால்வையும், பூங்கொத்தும் கொடுத்தார்.
அதன்பின் அவர் பேசுகையில், சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதற்காக மாரியப்பனை வாழ்த்துகிறேன். தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர். அவரது சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது என தெரிவித்தார்.