செய்திகள்
வரலாற்று சாதனை... பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
பாராலிம்பிக் போட்டியில் இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
சென்னை:
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்திய அணி டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 17 அக உயர்ந்துள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பாராலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள இறகுப்பந்து போட்டியில் நமது வீரர்கள் பிரமோத் பகத்தும், மனோஜ் சர்க்காரும் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு எனது பாராட்டுகளையும், அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட இருக்கும் பிரமோத் பகத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.