செய்திகள்
எம்எஸ் டோனி

டோனிக்காக 10 நாட்கள் கங்குலியுடன் வாக்குவாதம்- முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்

Published On 2021-06-02 04:28 GMT   |   Update On 2021-06-02 04:28 GMT
முன்னாள் கேப்டனான டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் பிரபலமானவர். இதேபோல அவரது விக்கெட் கீப்பிங் பணியும் பாராட்டுதலுக்குரியது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று கேப்டன் மகேந்திரசிங் டோனி. அவரது தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பைகளை கைப்பற்றி உள்ளது.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் டோனி கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்தார். இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற்றினார்.

முன்னாள் கேப்டனான டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் பிரபலமானவர். இதேபோல அவரது விக்கெட் கீப்பிங் பணியும் பாராட்டுதலுக்குரியது.

ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு பந்து வீச்சாளரிடம் அவர் தெரிவித்த வியூகம் பலமுறை அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளது.

டோனியை விக்கெட் கீப்பராக முதலில் கண்டு பிடித்தவர் கிரண் மோரே. முன்னாள் விக்கெட் கீப்பரான அவர் 2002 முதல் 2006 வரை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றினார். அப்போதுதான் டோனி சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

டோனி அணிக்கு தேர்வானது குறித்து கிரண் மோரே தற்போது வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் முறைகள் மாறிக்கொண்டிருந்த போது பேட்டிங் வரிசையில் 6, 7-வது இடத்தில் களம் இறங்கி அதிரடி காட்டுபவராக இருக்க வேண்டும் என எண்ணிணோம். அப்போது தான் டோனியை உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 தாக இருந்த நிலையில் டோனி மட்டும் 130 ரன்களை விலாசி இருந்தார். இதை பார்த்து நான் வியப்படைந்தேன்.


இதைத்தொடர்ந்து டோனிக்கு அணியில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கங்குலியிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப்தாஸ் குப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார்.

பின்னர் கங்குலியை சமாதானப்படுத்த எங்களுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது. டோனிக்காக நான் அவருடன் 10 நாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

இவ்வாறு கிரண் மோரே கூறி உள்ளார்.

டோனி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை (2010, 2011, 2018) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News