செய்திகள்
இயன் சேப்பல்

இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் புகழாரம்

Published On 2021-05-24 13:14 IST   |   Update On 2021-05-24 13:14:00 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது என இயன்சேப்பல் கூறியுள்ளார்.

சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் டெஸ்டில் மோசமாக தோற்ற பிறகு இந்திய அணி விராட்கோலி இல்லாமல் டெஸ்ட் தொடரை வென்றது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது ஆகும்.

முன்னணி வேகப்பந்து வீரர்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் காயம் அடைந்த போதிலும் மாற்று வேகப்பந்து வீரர்கள் களம் இறங்கி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

இந்தநிலையில் இதை மையமாக வைத்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல் இந்திய வேகப்பந்துவீச்சை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

வேகப்பந்து வீச்சில் இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. மாற்றுவீரர்கள் அணியின் வரிசையில் இடம்பெற்று உள்ளனர். கொரோனா காலத்திலும், வீரர்களுக்கு காயம் ஏற்படும் போதும் இந்திய அணிக்கு போதுமான அளவில் பயன்படுத்திக்கொள்வதற்குரிய திறமையான வேகப்பந்து வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. 4 டெஸ்டிலும் வேகப்பந்து வீச்சை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டி அட்டவணையின் சவாலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் திறமையான வேகப்பந்து வீரர்களை கொண்டுள்ள ஒரு சில அணிகளில் இந்தியாவும் ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News