செய்திகள்
டெய்லர்

ஐபிஎல் தள்ளிவைப்பு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும் - டெய்லர்

Published On 2021-05-24 07:24 GMT   |   Update On 2021-05-24 07:24 GMT
கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என நியூசிலாந்து வீரர் டெய்லர் கூறியுள்ளார்.

லண்டன்:

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தநிலையில் ஐபிஎல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியை பொறுத்தவரை இந்தியாவை விட நியூசிலாந்துக்கு சற்று வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள ஆடுகளத்தில் உலக டெஸ்ட்டுக்கு முன்பு நாங்கள் 2 டெஸ்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறோம்.

இங்கிலாந்து தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இன்னும் தங்களை தயார் படுத்திக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளர்.

37 வயதான ரோஸ் டெய்லர் 105 டெஸ்டில் விளையாடி 7343 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 290 ரன் குவித்து உள்ளார். 19 சதமும், 35 அரை சதமும் அடித்து உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

Tags:    

Similar News