செய்திகள்
இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்
இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதை ஈடுகட்டும் வகையில் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. கடந்த வருடம் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கூடுதல் போட்டிகள் நடத்தினால் டெலிவிசன் உரிமை மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கேட்டுக்கொண்டது. இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கை- இந்தியா தொடரில் கூடுதலாக இரண்டு போட்டிகள் நடத்தபட இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா அணி ஆகஸ்ட் மாதமும், ஸ்காட்லாந்து செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் நவம்பர் மாதமும் இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அப்போதும் கூடுதல் போட்டியில் விளையாட வலியுறுத்துவோம் என இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.