செய்திகள்
ஸ்ரேயாஸ் அய்யரின் போராட்டம் - இங்கிலாந்துக்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடில் ரஷித் பந்து வீச்சில் வெளியேற, தவான் 4 ரிஷப் பந்த் 21 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
ஸ்ரேயாஸ் அய்யரின் சிக்சர் மூலம் இந்திய அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை கடந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஆட்டக்காரராக அக்சர் படேல் வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். அவர் வந்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 7 ரன்னிலும் சுந்தர் 3 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.