செய்திகள்
நடராஜன்- வருண் சக்கரவர்த்தி

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி- தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆடுவது சந்தேகம்

Published On 2021-03-10 05:35 GMT   |   Update On 2021-03-10 05:35 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.
அகமதாபாத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது.

வருகிற 12-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 20 ஓவர் போட்டிகள் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் நடக்கிறது.

20 ஓவர் போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகும்.

நடராஜனுக்கு முழங்கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு முன்பு அவர் காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகமே. வேகப்பந்து வீரரான நடராஜன் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

சுழற்பந்து வீரரான வருண் சக்கரவர்த்தி உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்தார். காயத்தில் இருந்து குணமடைந்து அவர் முழு உடல் தகுதி பெறவில்லை.

அவர் ஏற்கனவே காயம் காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் உடல் தகுதி இல்லாத காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருண் சக்கரவர்த்தி கடந்த ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

வருண் சக்கரவர்த்தி இடத்தில் மும்பை இந்தியன் அணி வீரரான ராகுல் சாகர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. அவர் 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.
Tags:    

Similar News