செய்திகள்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஜோ ரூட் சதம் விளாசல்
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார்.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளும் காலே மைதானத்தில்தான் நடக்கிறது.
ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை மேத்யூஸ் (110), டிக்வெல்லா (92), தில்ருவான் பெரேரா (67) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 381 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (5), டொமினிக் சிப்லி (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பேர்ஸ்டோவும் 28 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ஆனால் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடினார்.
இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஜோ ரூட் 143 ரன்களுடன் களத்தில் உள்ளார்.