செய்திகள்
ஜடேஜா

ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் தேவை: ஜடேஜா சொல்கிறார்

Published On 2021-01-08 11:40 GMT   |   Update On 2021-01-08 11:40 GMT
சிட்னி டெஸ்டின் நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ஒன்றிணைந்து அபாரமாக விளையாடினால்தான் சிறந்த ஸ்கோரை எட்ட முடியும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது.

தற்போது வரை இந்தியா 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரோகித் சர்மா (26), ஷுப்மான் கில் (50) ஆட்டமிழந்த நிலையில், நாளைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி முன்னிலைப் பெற்றால்தான் வெற்றி பெற முடியும்.

புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஸ்மித்தை ரன்அவுட்டும் செய்தார்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நாளைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமென்றால், அனைத்து பேட்ஸ்மேன்களும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் ரன்கள் அடிக்க வேண்டும்.

இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி போட்டியை மேலும் எடுத்துச் செல்வதற்கு ஒரு பேட்ஸ்மேன் அல்ல, ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் பங்களிப்பை கொடுக்க வேண்டும். பொறுப்புடன் விளையாடினால், ஸ்கோர் போர்டில் எளிதாக ரன்கள் உயரும்.

சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து அதிகமான டாட் பால்ஸ் கிடைக்க திட்டம் தீட்டினோம். இதனால் அவர்களை எளிதில் பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது என்ற திட்டத்துடன் விளையாடினோம்’’ என்றார்.
Tags:    

Similar News