செய்திகள்
ஐபிஎல் கோப்பை

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது

Published On 2021-01-06 08:23 GMT   |   Update On 2021-01-06 08:23 GMT
14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது.
மும்பை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடந்தது.

இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விவரங்களை ஜனவரி 21-ந்தேதி முதல் அந்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு அணி மாறும் வீரர்கள் விவரங்களையும் அறிவித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News