செய்திகள்
பாபர் ஆசம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பெண் பாலியல் புகார்

Published On 2020-11-30 07:01 GMT   |   Update On 2020-11-30 07:01 GMT
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

லாகூர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

டிசம்பர் 18-ந் தேதி 20 ஓவர் போட்டி தொடங்குகிறது. தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியில் உள்ள 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது:-

பாபர் ஆசம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாத போதே எனக்கு தெரியும். அவர் என்னுடைய பள்ளி தோழர். கடந்த 2010-ம் ஆண்டு அவர் என்னிடம் காதலை தெரிவித்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த பாபர் ஆசம் என்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். கர்ப்பம் என்று தெரிந்தவுடன் பாபர் ஆசம் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்.

அவர் என்னை ஏமாற்றி விட்டார். பாபர் ஆசமிடமிருந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பாபர் ஆசம் பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர்மீது கூறப்பட்ட பாலியல் புகார் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணின் புகார் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் கூறும்போது, ‘பாபர் ஆசம் மீது குற்றச்சாட்டு கூறும் இந்த பெண் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்று அவரிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்’ என்றார்.

Tags:    

Similar News