செய்திகள்
கோப்புப்படம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் கிடையாது

Published On 2020-11-13 02:36 GMT   |   Update On 2020-11-13 02:36 GMT
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ம் ஆண்டில் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

தற்போது கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு யுக்திகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விளையாட வரும் வீரர், வீராங்கனைகள் அங்கு 14 நாட்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 14 நாள் தனிமைப்படுத்துதலை அமல்படுத்துவது மிகவும் கடினம் என்பதால் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு போட்டி அமைப்பாளர்கள் விடை அளித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி தோஷிரோ முட்டோ கூறுகையில், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி படைத்த வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், போட்டி தொடர்பான அலுவலர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த ஆண்டு நிலைமைக்கு தகுந்தபடி முடிவு எடுக்கப்படும். ரசிகர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் அவர்கள் வருவதற்கு முன்பும், ஜப்பான் வந்த பிறகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்’ என்றார்.

வீரர், வீராங்கனைகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஜப்பான் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பான பாதுகாப்பு வரைமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என்றும் போட்டி அமைப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டப்படும் என்று நம்புவதாக கூறியுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் 3 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் ஜப்பான் செல்கிறார். அப்போது ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தோஷிரோ முட்டோவிடம் ஆலோசனை நடத்துகிறார்.




Tags:    

Similar News