செய்திகள்
ஷேவாக் - விராட் கோலி - காம்பீர்

கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவையில்லை - காம்பீருக்கு ஷேவாக் பதிலடி

Published On 2020-11-08 07:23 GMT   |   Update On 2020-11-08 07:23 GMT
பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை வீரர்களைதான் மாற்ற வேண்டும் என்று காம்பீருக்கு சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி:

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஐ.பி.எல். கனவு இந்த ஆண்டும் தகர்ந்தது. அந்த அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது. 

இதை தொடர்ந்து பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் காம்பீர் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறும்போது ‘2013-ம் ஆண்டு முதல் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார்.இந்த 8 ஆண்டுகளில் அவரால் ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 

8 வருடங்கள் என்பது நீண்டகாலம். தோல்விக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பெங்களூர் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’என்றார். இந்த நிலையில் விராட் கோலிக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை என்று அவர் காம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-

கேப்டன் பதவியில் கோலி இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி, 20 ஓவர் மற்றும் டெஸ்டில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இந்திய அணியில் சாதித்த அவரால் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியாதது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். 

கேப்டனுக்கு ஒரு நல்ல அணி என்பது மிகவும் முக்கியமானது. எனவே பெங்களூர் அணி நிர்வாகம் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்கக் கூடாது.

அணியை எப்படி மேம்படுத்துவது என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். பெங்களூர் அணியில் மாற்றம் தேவை. தகுதி வாய்ந்த வீரர்களை அணிக்கு கொண்டுவர வேண்டும். வீரர்களின் மாற்றம்தான் பெங்களூர் அணிக்கு அவசியம் ஆனது. கேப்டனை நீக்கினால் எந்த தீர்வும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News