செய்திகள்
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

Published On 2020-11-05 21:20 IST   |   Update On 2020-11-05 21:20:00 IST
குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
ஐ.பி.எல். தொடரின் குவாலிபையர்-1 துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். குயின்டான் டி காக் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். மேலும் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கிடைத்தது.

அடுத்த ஓவரை அஸ்வின் வீசினார். 2-வது பந்தில் டி காக் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆகி கோல்டன் டக் ஆனார்.

அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் மும்பை இந்தியன்ஸ் 63 ரன்கள் விளாசியது.

8-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குயின்டான் டி காக் 25 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த சூர்யகுமார் 38 பந்தில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 11.5 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த பொல்லார்ட் அஸ்வின் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அஸ்வின் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

13 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே அடித்திருந்ததால் மும்பை அணி நெருக்கடிக்குள்ளானது. இருந்தாலும் இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16-வது ஓவரில் மும்பை அணிக்கு 18 ரன்கள் கிடைத்து. இதனால் 16 ஓவர் முடிவில் 140 ரன்களை எட்டியது.

17-வது ஓவரின் முதல் பந்தில் குருணால் பாண்ட்யா 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். 17-வது ஓவரில் ஐந்து ரன்களே கிடைத்தது. மும்பை அணி 17 ஓவரில் 145 ரன்களே எடுத்திருந்தது.



18-வது ஓவரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா- இஷான் கிஷன் ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 18-வது ஓவரில் இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 162 ரன்கள் அடித்தது. 19-வது ஓவரை ரபடா வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ஹர்திக் பாண்ட்யா. இந்த ஓவரில் மும்பைக்கு 18 ரன்கள் கிடைத்தது. இதனால் 180 ரன்களை எட்டியது.

கடைசி ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். 3-வது மற்றும் 4-வது பந்தை சிக்சருக்கு விளாசினார் ஹர்திக் பாண்ட்யா. கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி இஷான் கிஷன் அரைசதம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

இஷான் கிஷன் 30 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்தில் 5 சிக்சருடன் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.

Similar News