செய்திகள்
ருதுராஜ் கெய்க்வாட் - எம்எஸ் டோனி,

தொடர்ந்து 3 அரை சதம் - ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டோனி பாராட்டு

Published On 2020-11-02 08:34 GMT   |   Update On 2020-11-02 08:34 GMT
தொடர்ந்து 3 அரை சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பாராட்டை தெரிவித்தார்.

அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதுவரை நடந்த 12 ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த ஐ.பி.எல். தொடரில் தான் முதல்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

சென்னை அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்தது. சென்னையை போலவே பஞ்சாப்பும், ராஜஸ்தானும் 12 புள்ளிகள் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் 6-வது இடத்தையும், ராஜஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்தார். அவர் தொடர்ச்சியாக 3-வது அரை சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.

இதையொட்டி அவரை கேப்டன் டோனி பாராட்டினார். இது தொடர்பாக டோனி கூறியதாவது:-

ருதுராஜ் கெய்க்வாட் எப்போதுமே நன்றாக ஆடக் கூடியவர். அவரை கொரோனா 20 நாட்கள் முடக்கியது. இதனால் அவரை நாங்கள் கணிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது.

அதனால்தான் டுபெலிசிஸ்-வாட்சனை தொடக்க வீரர்களாக அனுப்பினோம். அது சரியாக அமையவில்லை. கடைசியில் ருதுராஜ் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடினார்.

இந்த ஐ.பி.எல். தொடர் மிகவும் கடினமானது. நிறைய தவறுகளை செய்தோம். கடைசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் பெருமை அடைகிறேன்.

அடுத்த தொடருக்கான ஏலத்தை கிரிக்கெட் வாரியம் எப்படி தீர்மானிக்கிறது என்பதை பொறுத்து அடுத்த அணி அமையும். வீரர்களை மாற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்க வேண்டும்.

ஐ.பி.எல். தொடங்கிய போது ஒரு அணியை உருவாக்கினோம். 10 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றினர். இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது தான்.

அடுத்த தொடரில் மீண்டும் வருவோம். ஜெர்சி கையெழுத்தினால் நான் ஓய்வு பெறுவதாக நினைத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News