செய்திகள்
டோனி அவுட்டாகிய காட்சி

2.5 ஓவரிலேயே சரணடைந்த சி.எஸ்.கே

Published On 2020-10-24 06:04 GMT   |   Update On 2020-10-24 07:41 GMT
இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

சிறிய கிரவுண்ட் என்பதால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல்  விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அப்பாடா!!! ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என சிஎஸ்கே வீரர்களுடன் ரசிகர்களும் பெருமூச்சு விட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் பொல்லார்ட். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார் பொல்லார்ட். இந்தத் தொடர் முழுவதுமே பீல்டிங் தேர்வு செய்த அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களுக்கு மேல் அடித்தால் ஜேஸிங் செய்வது கடினம் என்பது தெரிந்தும் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்ததால் ரசிகர்கள் மனதிற்குள் பொல்லார்ட் தவறு செய்து விட்டார் என நினைத்தனர்.

வாழ்வா? சாவா? போட்டியில் சென்னைக்கு அணிக்கு சற்று வழியை திறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் போகிறார் என்பதை சென்னை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

சென்னை அணி 170-க்கு மேல் அடித்துவிடும் என நினைத்து டி.வி.க்கு முன் சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட உட்கார்ந்தனர்.

ஏற்கனவே அனுபவ வீரர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டோனி கூறியிருந்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், என். ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கினார். இதுவரை விளையாடாமல் இருந்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிரும் அணியில் இடம் பிடித்தார்.

டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் களம் இறங்கி பவர் பிளேயை உற்சாகப்படுத்துவார் என நினைக்கையில் டோனி கெய்க்வாட்டை களமிறக்கினார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் ஜர்க் ஆகினர். ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய ருத்துராஜ் கெய்க்வாட், தொடக்க வீரரகாக களம் இறக்கப்பட்டதும் கூடுதல் நெருக்கடியை சந்தித்தார்.

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இவரின் ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது சாம் கர்ரனை களம் இறக்கியிருக்க  வேண்டியதுதானே என ரசிகர்கள் முணுமுணுத்தனர். தொடர் தோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் டோனியின் இந்த முதல் தவறு முற்றிலும் தவறாக அமைந்தது.



அடுத்து அம்பதி ராயுடு பும்ரா வீசிய 2-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து அதன்பின் நீக்கப்பட்ட ஜெகதீசன், இன்று நான் யார்? என்பதை நிரூபிக்க களம் இறங்கினார். ஆனால் பும்ராவின் பந்தில் சிக்கி முதல் பந்திலேயே நடையை கட்டினார்.

3-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே-யின் நங்கூரம் என அழைப்படும் டு பிளிஸ்சிஸ் 1 ரன்னில் வெளியேறினார். கண்ணை மூடி திறப்பதற்குள் 2.5 ஓவரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர் 3 ரன்கள் எடுப்பதற்குள் பெவிலியன் திரும்பியதால், 2.5 ஓவரிலேயே சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

ஒருவேளை சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டிருந்தால் ஒருமுனையில் நிலைத்து நின்று போட்டியை மாற்றியிருக்கலாம்.

ஜடேஜா 7 ரன்னிலும், வழக்கம்போல எம்எஸ் தோனி 16 ரன்னிலும் நடையை கட்ட, 30 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. சாம் கரன் கடைசி வரை போராடி 52 ரன்கள் அடிக்க பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசும் அளவிற்கு 114 ரன்கள் அடித்தது.

சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாம் கர்ரன் என பந்து வீச்சாளர்கள் இருந்ததால் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை விடாமல் இருந்தனர்.

ஆனால் தொடக்க வீரர்களாக சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்து துவம்சம் செய்து சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை குழி தோண்டி புதைத்தனர்.

12.2 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது இஷான் 37 பந்துகளில் 68 ரன்கள் 37 பந்துகளில் 66 ரன்களும், டி காக் 46 ரன்களும் அடித்தனர்.

தீபக் சாஹர், ஹசில்வுட் பந்து வீச்சு எடுபடாத போதிலும், நியூ பால் உள்பட போட்டி முழுவதும் சாம் கர்ரனை பந்து வீச அழைக்காதது ஏன்? என்பது டோனிக்குதான் வெளிச்சம்.

இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.

ஒரு சதவீதம் கூட ஈடுகொடுக்க முடியாமல் போனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
Tags:    

Similar News