செய்திகள்
சதம் அடித்த மேக்ஸ்வெல், அலேக்ஸ் கேரி

அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Published On 2020-09-17 10:33 GMT   |   Update On 2020-09-17 10:33 GMT
மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் ஆகியோரின் சதத்தால் 302 ரன்னை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா தொடரை வென்றது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேர்ஸ்டோவ் (112) சதத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 73 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. டேவிட் வார்னர் (24), ஆரோன் பிஞ்ச் (12), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (4), லாபஸ்சாக்னே (20), மிட்செல் மார்ஷ் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு அலேக்ஸ் கேரி உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். 47.3 ஓவரில் 285 ரன்கள் எடுத்திருக்கும்போது மேக்ஸ்வெல் 90 பந்தில் 4 பவுண்டர, 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். 293 ரன்கள் எடுத்திருக்கும்போது அலேக்ஸ் கேரி 114 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 106 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மிட்செல் ஸ்டார்க் 3 பந்தில் 11 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. டி20 தொடரை 1-2 என இழந்ததற்கு பழிதீர்த்தது.
Tags:    

Similar News