செய்திகள்
7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் முதல் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிரட்லி ஹெலனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு சமித் முன்னேறினார்.
அது மட்டுமல்லாமல் 7 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் பெற்றார்.
இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். அவரையடுத்து இத்தனை ஆண்டுகளில் வெறு எந்த ஒரு இந்திய வீரரும் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் வெற்றி பெறவில்லை என்ற நிலை இருந்து வந்தது.
முதல் சுற்றில் பெற்ற வெற்றியை வெற்றியை தொடர்ந்து அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள சுமித் நாகல் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் டொமினிக் திய்ம்மை எதிர்கொள்கிறார்.