செய்திகள்
மன்தீப் சிங்

மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-08-12 22:47 GMT   |   Update On 2020-08-12 22:47 GMT
மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் மாற்றப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வந்துள்ள இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர்குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக், மன்தீப் சிங் ஆகிய 6 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் சாய் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மன்தீப் சிங்குக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு வழக்கமானதை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதும் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மற்ற 5 ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்தீப் சிங் சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 6 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் வருகிற 19-ந் தேதி தொடங்கும் என்று ‘சாய்’ அறிவித்துள்ளது. ஆக்கி இந்தியா நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News