செய்திகள்
டோனிக்கு 2-வது குழந்தையா? ஷிவா பிறந்த குழந்தையுடன் போஸ் கொடுத்ததால் ஆச்சர்யமான குழப்பத்தில் ரசிகர்கள்
டோனியின் குழந்தை ஷிவா ஒரு குழந்தையை தனது கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை யார் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. அதை டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் நிர்வகிக்கிறார்கள். அதேபோல் டோனியின் மனைவி சாக்ஷிக்கும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது.
இந்நிலையில், ஷிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு புகைப்படத்தை சாக்ஷி பகிர்ந்துள்ளார். அதில் டோனியின் மகள் ஷிவா தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தை டோனியின் மனைவி சாக்ஷி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
ஷிவாவின் கையில் இருப்பது யார் குழந்தை என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் டோனி-சாக்ஷி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும், பல ரசிகர்கள் டோனி-சாக்ஷிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா-நடாஷா தம்பதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. பாண்டியாவின் குழந்தையை தான் டோனியின் குழந்தை ஷிவா தனது கையில் வைத்துள்ளார் என ரசிகர்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.