செய்திகள்
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. ஆகஸ்ட் 15-ந்தேதி பயிற்சியை தொடங்குகிறது?
ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன் ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் வருகிற 21-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் சென்றபின் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆகஸ்ட் 15-ந்தேதியில் இருந்து இந்திய வீரர்களை மட்டும் அழைத்து ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை நடத்த சிஎஸ்கே விரும்புகிறது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடம் பெற இருக்கிறது.
அனுமதி கிடைத்தவுடன் கேப்டன் எம்எஸ் டோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா மற்றும் சில வீரர்கள் சென்னையில் ஒன்றிணைவர்கள். ஆகஸ்ட் 14-ந்தேதி அனைத்து வீரர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு 15-ல் பயிற்சி தொடங்க இருக்கிறது.
வீரர்கள் சென்னைக்கு வந்தாலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், அவர்கள் சென்னை வருவதற்கு முன் இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்து, நெகட்டிவ் முடிவை தெரிவிக்க வேண்டும். இதனால் வருவதில் சிக்கல் இருக்காது’’ என்று கூறப்படுகிறது.
ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின் எங்கும் செல்லக்கூடாது என்ற உத்தரவு வீரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் இருக்கும்போது இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின்தான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’’ எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் அனுமதியை பெற சிஎஸ்கே நிர்வாகம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.