செய்திகள்
மகனுடன் ஹர்திக் பாண்ட்யா

அப்பாவை போன்று வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்: பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல். ராகுல் அறிவுரை

Published On 2020-08-08 09:42 GMT   |   Update On 2020-08-08 09:42 GMT
வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என சமீபத்தில் பிறந்த ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இந்தி நடிகையும், மாடல் அழகியுமான செர்பியா நாட்டை சேர்ந்த நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை 30-ந்தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. தந்தையான சந்தோஷத்தில் உள்ள பாண்ட்யாவுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், சாஹல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரரான குருணால் பாண்ட்யாவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆவார்.  அவர் தனது சகோதரனின் குழந்தையை தூக்கி பிடித்தபடி, ‘கிரிக்கெட் பற்றி நாம் பேசுவோம்’ என்ற தலைப்புடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

இதற்கு பலர் லைக் செய்துள்ளனர். ஹர்திக் பண்ட்யாவின் நெருங்கிய நண்பரும், சகவீரருமான கே.எல். ராகுல், ‘‘வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’’ என கமெண்ட் பகுதியில் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று தனது குழந்தைக்காக டயாபர் வாங்க ஷாப்பிங் செய்த புகைப்படம் ஒன்றை ஹர்திக் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். காரின் ஓட்டுனர் இருக்கையில் ஹர்திக் அமர்ந்திருப்பதும், பின் இருக்கையில் குழந்தைகளுக்கான டயாபர்கள் இருப்பதும் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

ஹர்திக், காயத்தினால் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலம் ஆக விளையாடாமல் இருந்து வரும் நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிகளில் ஹர்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News