செய்திகள்
பிரவீன் தாம்பே

48 வயது இந்திய வீரர் கரீபியன் பிரிமீயர் டி20 லீக்கில் விளையாடுகிறார்

Published On 2020-07-07 09:48 GMT   |   Update On 2020-07-07 09:48 GMT
இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான பிரவீன் தாம்பே கரீபியன் டி20 லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை கிரிக்கெட் அணிக்காக முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் பிரவீன் தாம்பே. இவர் 41 வயதில் ஐபிஎல் டி20 லீக்கில் அறிமுகம். ஆனால், அதன்பின் அதிக வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலம் எடுத்துள்ளது. ஆனால், டி10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி இல்லை என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால் கொல்கத்தா அணி அவரை நீக்கியது.

இந்நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விண்ணப்பம் செய்தார். அவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரவீன் தாம்பே கூறுகையில் ‘‘நான் உடற்தகுதியாக இருந்த போதிலும் பிசிசிஐ என்னை விளையாட அனுமதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் மற்ற லீக்குகளில் விளையாடக்கூடாது. நான் இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் லீக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளேன். இதனால் டிரின்பாகோ அணி என்னை ஏலம் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வேன்’’ என்றார்.

கரீபியன் பிரிமீயர் லீக் ஆகஸ்ட் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாட இருக்கும் முதல் இந்தியா வீரர் இவராவார்.
Tags:    

Similar News