செய்திகள்
கென்யா மாரத்தான் வீரருக்கு 4 ஆண்டு தடை
ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறிய கென்யா மாரத்தான் வீரர் கிப்சாங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்து உள்ளது.
நைரோபி:
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் கென்யாவைச் சேர்ந்த வில்சன் கிப்சாங். மாரத்தானில் உலக சாதனை படைத்திருக்கிறார். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மாரத்தானில் வெண்கலம் வென்றிருந்தார். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை.
அத்துடன் சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் அளித்திருக்கிறார். 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்து உள்ளது. தடை காலம் 2020-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.